அத்தியாயம் 38
யெகோவாவின் வார்த்தைகள் 
 1 அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: 
 2 “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 
 3 இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; 
நான் உன்னைக் கேட்பேன்; 
நீ எனக்குப் பதில் சொல் 
 4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 
நீ அறிவாளியானால் அதைச் சொல். 
 5 அதற்கு அளவு குறித்தவர் யார்? 
அதின்மேல் நூல்போட்டவர் யார்? 
இதை நீ அறிந்திருந்தால் சொல். 
 6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? 
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? 
 7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, 
தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. 
 8 கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, 
அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 
 9 மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 
 10 நான் அதற்கு எல்லையைக் குறித்து, 
அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: 
 11 இதுவரை வா, மீறி வராதே; 
உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? 
 12 தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, 
அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, 
 13 உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, 
சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? 
 14 பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; 
அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். 
 15 துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; 
மேட்டிமையான கை முறிக்கப்படும். 
 16 நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? 
 17 மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? 
மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? 
 18 நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? 
இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். 
 19 வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? 
இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? 
 20 அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? 
அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? 
 21 நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? 
உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 
 22 உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? 
கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? 
 23 ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், 
பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். 
 24 வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? 
 25 பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, 
இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, 
 26 பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், 
மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, 
 27 வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், 
இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? 
 28 மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? 
 29 உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? 
ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? 
 30 தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, 
ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. 
 31 அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? 
அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? 
 32 நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? 
துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? 
 33 வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? 
அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? 
 34 ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று 
உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? 
 35 நீ மின்னல்களை வரவழைத்து, 
அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, 
இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? 
 36 மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? 
உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? 
 37 ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? 
 38 தூசியானது பரவலாகவும், 
மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், 
வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? 
 39 நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, 
 40 சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, 
அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? 
 41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, 
ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, 
அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?