அத்தியாயம் 14
விவேகமும் அலட்சியமும் 
 1 புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; 
புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 
 2 நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; 
தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். 
 3 மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; 
ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். 
 4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; 
காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. 
 5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; 
பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். 
 6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; 
புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். 
 7 மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; 
அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். 
 8 தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; 
மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். 
 9 மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; 
நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. 
 10 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; 
அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். 
 11 துன்மார்க்கனுடைய வீடு அழியும்; 
செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். 
 12 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; 
அதின் முடிவோ மரணவழிகள். 
 13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; 
அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். 
 14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், 
நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். 
 15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; 
விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். 
 16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; 
மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். 
 17 முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; 
கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 
 18 பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; 
விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். 
 19 தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. 
 20 தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; 
செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. 
 21 பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; 
தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். 
 22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? 
நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. 
 23 எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; 
உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். 
 24 ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; 
மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. 
 25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; 
வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். 
 26 யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; 
அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். 
 27 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; 
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 
 28 மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; 
மக்கள்குறைவு தலைவனின் முறிவு.  29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; 
முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். 
 30 சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; 
பொறாமையோ எலும்புருக்கி. 
 31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; 
தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; 
 32 துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; 
நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். 
 33 புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். 
 34 நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. 
 35 ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; 
அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.