சங்கீதம் 3
தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். 
 1 யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! 
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 
 2 தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, 
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) *  
 3 ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், 
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 
 4 நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; 
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) 
 5 நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; 
யெகோவா என்னைத் தாங்குகிறார். 
 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் 
நான் பயப்படமாட்டேன். 
 7 யெகோவாவே, எழுந்தருளும்; 
என் தேவனே, என்னை காப்பாற்றும். 
நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, 
துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 
 8 ஜெயம் யெகோவாவுடையது; 
தேவனே உம்முடைய ஆசீர்வாதம் 
உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).