சங்கீதம் 7
பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல். 
 1 என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; 
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். 
 2 எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், 
விடுவிக்கிறவன் இல்லாததால், 
அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 
 3 என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 
என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 
 4 என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், 
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், 
 5 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, 
என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, 
என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) 
 6 யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, 
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, 
எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. 
 7 மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; 
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். 
 8 யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; 
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் 
எனக்கு நியாயம்செய்யும். 
 9 துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; 
நீதிமானை நிலைநிறுத்தும்; 
நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், 
சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். 
 10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. 
 11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; 
அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன். 
 12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 
 13 அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; 
தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். 
 14 இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; 
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 
 15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; 
தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 
 16 அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், 
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். 
 17 நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். 
நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.