சங்கீதம் 13
சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், 
எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 
 2 என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, 
எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? 
எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? 
 3 என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 
எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 
அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 
 4 அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, 
நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். 
 5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; 
உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 
 6 யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.