சங்கீதம் 17
தாவீதின் ஜெபம். 
 1 யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், 
என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; 
பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் 
என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 
 2 உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; 
உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக. 
 3 நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, 
இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் 
ஒன்றும் காணாமலிருக்கிறீர்; * மற்றவர்களைப் போல தீமை பேசுகிறதில்லை.  என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன். 
 4 மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே 
தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன். 
 5 என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. 
என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. 
 6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், 
ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, 
என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். 
 7 உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து 
உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! 
உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும். 
 8 கண்மணியைப்போல் என்னைக் காத்து. 
 9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், 
என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, 
உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். 
 10 அவர்கள் கொழுத்துப்போய், 
தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள். 
 11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; 
எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன. 
 12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், 
மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள். 
 13 யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் 
என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். 
 14 யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 
இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 
உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 
அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 
அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 
தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 
 15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; 
நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.