சங்கீதம் 19
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 
 1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, 
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. 
 2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, 
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 
 3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, 
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 
 4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், 
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; 
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். 
 5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, 
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. 
 6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, 
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; 
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. 
 7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், 
ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; 
யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், 
பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 
 8 யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், 
இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; 
யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 
 9 யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், 
என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; 
யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், 
அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. 
 10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், 
தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. 
 11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; 
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 
 12 தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? 
மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். 
 13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; 
அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; 
அப்பொழுது நான் உத்தமனாகி, 
பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். 
 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, 
என் வாயின் வார்த்தைகளும், 
என் இருதயத்தின் தியானமும், 
உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.