சங்கீதம் 21
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 
 1 யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; 
உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! 
 2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, 
அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) 
 3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, 
அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். 
 4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; 
நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். 
 5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; 
மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர். 
 6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; 
அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 
 7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; 
உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். 
 8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; 
உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 
 9 உமது கோபத்தின் காலத்திலே 
அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; 
யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; 
நெருப்பு அவர்களை அழிக்கும். 
 10 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் 
அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். 
 11 அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; 
தீவினை செய்ய முயன்றார்கள்; 
ஒன்றும் வாய்க்காமல்போனது. 
 12 உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். 
 13 யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; 
அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.