சங்கீதம் 32
மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல். 
 1 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, 
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, 
அவன் பாக்கியவான். 
 2 எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ, 
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். 
 3 நான் அடக்கிவைத்தவரையில், 
எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 
 4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், 
என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா) 
 5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; 
என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; 
தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) 
 6 இதற்காக *  உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; 
அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது. 
 7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; 
என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, 
இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா) 
 8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; 
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 
 9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, 
உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும் 
கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 
 10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; 
யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். 
 11 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; 
செம்மையான இருதயமுள்ளவர்களே, 
நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.