சங்கீதம் 37
தாவீதின் பாடல். 
 1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 
நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 
 2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, 
பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். 
 3 யெகோவாவை நம்பி நன்மைசெய்; 
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 
 4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; 
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 
 5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, 
அவர்மேல் நம்பிக்கையாயிரு; 
அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். 
 6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், 
உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். 
 7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; 
காரியசித்தியுள்ளவன் மேலும் 
தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. 
 8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; 
பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். 
 9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; 
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ 
பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 
 10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; 
அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 
 11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, 
மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 
 12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, 
அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். 
 13 ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; 
அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 
 14 சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், 
செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், 
துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 
 15 ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; 
அவர்கள் வில்லுகள் முறியும். 
 16 அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, 
நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 
 17 துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; 
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். 
 18 உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; 
அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 
 19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, 
பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 
 20 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், 
யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல 
புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். 
 21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; 
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 
 22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; 
அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். 
 23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், 
அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 
 24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; 
யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 
 25 நான் இளைஞனாயிருந்தேன், 
முதிர்வயதுள்ளவனுமானேன்; 
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், 
அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. 
 26 அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், 
அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். 
 27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். 
 28 யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; 
அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; 
அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; 
துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். 
 29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, 
என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். 
 30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, 
அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 
 31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; 
அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. 
 32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, 
அவனைக் கொல்ல வகைதேடுகிறான். 
 33 யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; 
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. 
 34 நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 
அவருடைய வழியைக் கைக்கொள்; 
அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 
துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 
 35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் 
அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 
 36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், 
அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், 
அவன் காணப்படவில்லை. 
 37 நீ உத்தமனை நோக்கி, 
செம்மையானவனைப் பார்த்திரு; 
அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். 
 38 அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; 
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. 
 39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; 
இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். 
 40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, 
அவர்களை விடுவிப்பார்; 
அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், 
அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.