சங்கீதம் 137
 1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, 
அங்கே சீயோனை நினைத்து அழுதோம். 
 2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். 
 3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், 
எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: 
சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். 
 4 யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? 
 5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக. 
 6 நான் உன்னை நினைக்காமலும், 
எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், 
என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 
 7 யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்; 
அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. 
 8 பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, 
நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். 
 9 உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, 
கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.