அத்தியாயம் 5
 1 என் சகோதரியே! என் மணவாளியே! 
நான் என் தோட்டத்திற்கு வந்தேன், 
என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; 
என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; 
என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். 
சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! 
குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். 
சூலமித்தியாளின் இரவு மணவாளி  
 2 நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; 
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: 
என் சகோதரியே! என் பிரியமே! 
என் புறாவே! என் உத்தமியே! 
கதவைத் திற; 
என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். 
 3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்; 
நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், 
என் பாதங்களைக் கழுவினேன், 
நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன். 
 4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், 
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது. 
 5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; 
பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், 
என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. 
 6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; 
என் நேசரோ இல்லை, போய்விட்டார்; 
அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. 
அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; 
அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை. 
 7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, 
என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; 
மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள். 
 8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், 
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள்  
 9 பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! 
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? 
நீ இப்படி எங்களை ஆணையிட, 
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி  
 10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; 
பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், 
யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை. 
 11 அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; 
அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், 
காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது. 
 12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், 
பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது. 
 13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், 
வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; 
அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, 
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. 
 14 அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; 
அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. 
 15 அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; 
அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் 
கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது. 
 16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; 
அவர் முற்றிலும் அழகுள்ளவர். 
இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.