1 நாளாக. 19. அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, நானும் அவனுடைய மகனாகிய இவனுக்கு தயவுசெய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியர்களின் தேசத்திலே வந்தபோது, அம்மோனியர்களின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனுக்கு மரியாதை கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவனுடைய வேலைக்காரர்கள் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.