எரே. 8. அக்காலத்தில் யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும் எருசலேமுடைய குடிமக்களின் எலும்புகளையும், அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுத்து, அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும். இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? ஆனாலும் எருசலேமியராகிய இந்த மக்கள் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.