யோபுவின் மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு சம்பவித்த தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதாபப்படவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை செய்துகொண்டு, அவரவர் தங்கள் இடங்களிலிருந்து வந்தார்கள்.
அவர்கள் தூரத்தில் வரும்போது தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் அங்கியைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டுவந்து,
அவனுடைய துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனுடன் ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழு நாட்கள், அவனுடன் தரையில் அமர்ந்திருந்தார்கள்.
அந்த நாள் இருளாக்கப்படுவதாக;
தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும்,
வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
கடுமையான இருளும்
மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி,
மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
அந்த இரவை இருள் பிடிப்பதாக;
வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும்,
அதைச் சபிப்பார்களாக.
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு,
அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும்,
என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
நான் கர்ப்பத்தில் அழியாமலும்,
கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
என்னை ஏந்திக்கொள்ள மடியும்,
நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
அப்படியில்லாதிருந்தால்,
அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
அல்லது, பொன்னை உடையவர்களும்,
தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும்,
வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது;
பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்;
ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்;
அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து,
புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும்,
மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
தன் வழியைக் காணமுடியாதபடிக்கு,
தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது;
என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது;
நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
எனக்குச் சுகமுமில்லை,
நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை;
எனக்குத் துன்பமே வந்தது.
எலிப்பாஸின் வார்த்தைகள்
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர்,
தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்;
அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும்,
உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ?
சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது?
இதை நினைத்துப்பாரும்.
நான் கண்டிருக்கிறபடி,
அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள்,
அதையே அறுக்கிறார்கள்.
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து,
அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்;
பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும்,
பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது,
அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது,
இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது,
என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது,
என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது,
ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை;
அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ?
மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ?
கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை;
தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
புழுதியில் அஸ்திபாரம் போட்டு,
மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால்
அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து,
கவனிப்பார் ஒருவருமில்லாமல்,
நிலையான அழிவை அடைகிறார்கள்.
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ?
ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.
“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்?
பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
கோபம் மூடனைக் கொல்லும்;
பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு
உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி,
காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்;
பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை;
வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,
மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
ஆனாலும் நான் தேவனை நாடி,
என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத
அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து,
துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து,
வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க,
அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்;
தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி,
மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும்,
பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு;
தீமையானது தன் வாயை மூடும்.
இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்;
ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்;
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்;
ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும்,
போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்;
அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்;
காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்;
வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்;
உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது
குறைவைக் காணமாட்டீர்.
உம்முடைய சந்ததி பெருகி,
உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல,
முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்;
காரியம் இப்படியிருக்கிறது;
இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
யோபுவின் வார்த்தைகள்
சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது;
அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது;
தேவனால் உண்டாகும் பயங்கரங்கள்
எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.
புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ?
தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ?
முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது;
அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது.
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு,
நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து,
தேவன் என்னை நொறுக்க விரும்பி,
தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்.
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே;
அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால்
உணர்வில்லாமல் இருப்பேன்;
பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை,
அவர் என்னைக் கைவிடமாட்டார்.
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்?
என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது?
என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ?
உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே.
உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்;
அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,
அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி,
சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன.
அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்;
அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும்.
தேமாவின் பயணக்காரர் தேடி,
சேபாவின் பயணக்கூட்டங்கள்
அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்;
அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள்.
அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்;
என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும்,
உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;
அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள்,
கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்;
நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு?
உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து,
நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து,
உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்;
அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்;
அநீதி காணப்படாதிருக்கும்;
திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
என் நாவிலே அநீதி உண்டோ?
என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ?
அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
ஒரு வேலையாள் நிழலை விரும்பி,
ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி,
பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்?
இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி,
விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது.
என் உடல் பூச்சிகளினாலும்,
அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது;
என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது;
அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும்,
என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை;
உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
மேகம் பறந்துபோகிறதுபோல,
பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான்.
இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,
அவனுடைய இடம் இனி அவனை அறியாது.
ஆகையால் நான் என் வாயை அடக்காமல்,
என் ஆவியின் வேதனையினால் பேசி,
என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ?
நான் ஒரு திமிங்கிலமோ?
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,
என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால்,
நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து,
தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்.
அதினால் என் ஆத்துமா,
நெருக்கப்பட்டு சாகிறதையும்,
என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட,
மரணத்தையும் விரும்புகிறது.
இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்;
எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்;
என் நாட்கள் மாயைதானே.
மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும்,
அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,
நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும்,
அவன் எம்மாத்திரம்?
நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும்,
என்னை விடாமலும் இருப்பீர்.
மனிதர்களைக் காப்பவரே,
பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன?
நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல்,
நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன?
என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?
இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்;
விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.
பில்தாதின் வார்த்தைகள்
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும்
அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
நீர் தேவனை ஏற்கனவே தேடி,
சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து,
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால்,
அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார்.
உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும்,
உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து,
அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்;
பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து,
தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?
தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே,
அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ?
தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்;
மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.
அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய்,
அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும்.
ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால்,
அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி,
அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;
அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி,
கற்பாறையை நாடும்.
அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின்,
அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும்.
இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது;
ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை,
பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும்,
உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்;
துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.
யோபுவின் வார்த்தைகள்
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்;
அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்;
தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்;
அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
அவர் ஒருவரே வானங்களை விரித்து,
சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும்,
அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,
எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
இதோ, அவர் என் அருகில் போகிறார்,
நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார்,
நான் அவரை அறியவில்லை.
இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்?
நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்;
ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும்,
அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்?
நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல்,
என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன்.
நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும்,
அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன்.
அவர் புயலினால் என்னை முறிக்கிறார்;
காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல்,
கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்;
நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;
நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்;
என் வாழ்க்கையை வெறுப்பேன்.
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்;
சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது,
அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.
உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது;
அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்;
அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார்.
என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது;
அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும்.
அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும்,
இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி,
திடன்கொள்வேன் என்று சொன்னால்,
என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்;
என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன்.
நான் பொல்லாதவனாயிருந்தால்,
வீணாகப் போராடவேண்டியது என்ன?
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி,
என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர்.
அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும்.
நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும்,
நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும்,
அவர் என்னைப்போல மனிதன் அல்லவே.
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.
அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக;
அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக.
அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்;
இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது,
நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து,
என் மனவேதனையினாலே பேசுவேன்.
நான் தேவனை நோக்கி:
என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்;
நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து,
துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
சரீரக்கண்கள் உமக்கு உண்டோ?
மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ?
நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து,
என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும்,
உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ?
நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்;
உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை.
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும்,
என்னை அழிக்கிறீர்.
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ?
தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;
உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது.
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும்,
இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து,
என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர்.
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ,
நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்;
அவமானத்தால் நிரப்பப்பட்டேன்;
நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி,
எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர்.
நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்;
என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கச் செய்கிறீர்;
போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன?
ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே.
நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல்,
கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன்.
என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும்,
இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே,
நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.
சோப்பாரின் வார்த்தைகள்
என் சொல் சுத்தம் என்றும்,
நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
ஆனாலும் தேவன் பேசி,
உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து,
உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்;
உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது;
ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து,
சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?
அது வானம்வரை உயர்ந்தது;
உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது,
நீர் அறிந்து கொள்வது என்ன?
அதின் அளவு பூமியைவிட நீளமும்,
சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது.
அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும்,
அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும்,
அவரைத் தடை செய்கிறவன் யார்?
மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்;
அக்கிரமத்தை அவர் கண்டும்,
அதைக் கவனிக்காமல் இருப்பாரோ?
புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும்,
அறிவுள்ளவனாக இருக்கிறான்.
நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி,
உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
உம்முடைய கையிலே அநீதி இருந்தால்,
அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.
அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து,
பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர்.
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து,
கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்;
இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்;
தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர்.
பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்;
அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள்.
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய்,
அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று,
அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.
யோபுவின் வார்த்தைகள்
என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு,
தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்;
உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான்.
ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்;
கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும்.
திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு;
தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு;
அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார்,
அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள்,
அவைகள் உனக்கு அறிவிக்கும்.
அல்லது பூமியை விசாரித்துக் கேள்,
அது உனக்குப் போதிக்கும்;
சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
எல்லா உயிரினங்களின் உயிரும்,
மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,
காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்?
அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது;
அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்;
அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும்.
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு;
மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும்,
அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து,
நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார்.
அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து,
அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார்.
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய்,
பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி,
முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார்.
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்;
பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார்.
அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி,
மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்;
அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார்.
அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு,
அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார்.
அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்;
வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.
இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு,
என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்;
நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது;
தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்;
நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்;
அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு,
என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி,
அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ?
அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ?
தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ?
மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ?
நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால்,
அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ?
அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது;
உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
நீங்கள் மவுனமாயிருங்கள்,
நான் பேசுகிறேன்,
எனக்கு வருகிறது வரட்டும்.
நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி,
என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,
அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.
அவரே என் பாதுகாப்பு;
மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான்.
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும்,
உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.
இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்;
என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்?
நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.
இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக;
அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்;
உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக.
நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்;
அல்லது நான் பேசுவேன்;
நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை?
என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
நீர் உமது முகத்தை மறைத்து,
என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ?
காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்;
என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர்.
என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு,
என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்;
என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.
இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும்,
பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும்
வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்;
நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து,
உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ?
அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ?
ஒருவனுமில்லை.
அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால்,
அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது;
அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு;
அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும்,
அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
அதின் வேர் தரையிலே பழையதாகி,
அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து,
இளமரம்போலக் கிளைவிடும்.
மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான்,
மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே?
தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து,
வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல,
மனிதன் படுத்துக்கிடக்கிறான்,
வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை,
தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,
உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து,
என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
மனிதன் இறந்தபின் பிழைப்பானோ?
எனக்கு மாறுதல் எப்போது வருமென்று
எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்;
உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக.
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்;
என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு
முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர்.
மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்;
கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும்.
தண்ணீர் கற்களைக் குடையும்;
பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்;
அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்;
அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர்.
அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்;
அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான்.
அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்;
அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான்.
எலிப்பாஸின் வார்த்தைகள்
நீர் பயபக்தியை வீணென்று சொல்லி,
தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர்.
உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது;
நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர்.
நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது;
உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ?
மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு,
ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ?
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்?
எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
தேவன் அருளிய ஆறுதல்களும்,
உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ?
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது?
உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன?
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.
மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும்,
பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை;
வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்;
நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது;
அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்;
பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது;
அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல்,
ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.
அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்;
இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து,
போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி,
சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது;
அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
ஆனாலும் பாழான பட்டணங்களிலும்,
குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான்.
அவன் செல்வந்தனாவதுமில்லை,
அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை;
அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
இருளுக்கு அவன் தப்புவதில்லை;
நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்;
அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்;
வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது;
நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.
அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்;
அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை.
பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்;
லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும்.
அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்;
அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான்.
யோபுவின் வார்த்தைகள்
உங்களைப்போல நானும் பேசமுடியும்;
நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால்,
நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து,
உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.
ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன்,
என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது;
நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்;
என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.
நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி;
என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று,
என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது,
என் மேல் கோபப்படுகிறான்;
என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்;
இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்;
என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.
தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து,
துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.
நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்;
அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி,
என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்;
என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்;
பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்;
என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது;
மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும்,
என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது.
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே;
என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது.
எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;
என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல,
தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும்.
குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது;
நான் திரும்பிவராதவழியே போவேன்.
என் ஆவி உடைகிறது
17:1
என் ஆவி நொறுங்கி விட்டது.
, என் ஆயுசு நாட்கள் முடிகிறது;
கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?
அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,
எனக்காகப் பிணைக்கப்படுவீராக;
வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;
ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,
அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;
அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.
இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;
என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;
குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;
உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
என் நாட்கள் முடிந்தது;
என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
அவைகள் இரவைப் பகலாக்கியது;
இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,
பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;
இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;
புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
என் நம்பிக்கை இப்போது எங்கே?
நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;
அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
பில்தாதின் வார்த்தைகள்
இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்;
நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
நான் தவறாக நடந்தது உண்மையானாலும்,
என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி,
எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன்,
கேட்பார் ஒருவரும் இல்லை;
கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து,
என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு,
என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார்,
நான் அற்றுப்போகிறேன்;
என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்;
என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து,
எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி,
என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்;
எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள்.
என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும்,
என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்;
அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.
நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்;
என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது;
என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன்.
சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்;
நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்;
நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்,
எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்?
என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன?
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;
அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,
அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும்,
ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
அவர் கடைசி நாளில் பூமியின்மேல்
19:25
அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21
நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு,
நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
அவரை நானே பார்ப்பேன்;
வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்;
இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது,
நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.
பட்டயத்திற்குப் பயப்படுங்கள்;
நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று,
கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.
சோப்பாரின் வார்த்தைகள்
துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும்,
மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல்
இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும்,
அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும்,
அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்;
அவனைக் கண்டவர்கள்,
அவன் எங்கே? என்பார்கள்.
அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்;
இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை;
அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை.
அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்;
அவன் பறித்ததை அவன்
20:10
அவனுடைய பலத்த கை
கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து,
அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால்,
அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
அதை விடாமல் அடக்கி,
தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி,
அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும்.
அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்;
தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்;
விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்;
அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்;
அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான்.
அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு,
தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும்,
தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும்,
அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை;
ஆகையால் அவனுடைய செல்வம் நிலைநிற்பதில்லை.
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின்,
அவனுக்கு வேதனை உண்டாகும்;
சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும்,
அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது,
அதை அவன்மேல் வரச்செய்வார்.
இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும்.
உருவின பட்டயம் அவன் சரீரத்தையும்,
மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்;
பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்;
அணையாத நெருப்பு அவனை எரிக்கும்;
அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான்.
வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்;
தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும்.
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும்,
அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான்.
யோபுவின் வார்த்தைகள்
நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்?
அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா?
என்னைக் கவனித்துப்பாருங்கள்,
அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு,
உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்;
நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும்.
துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து,
ஏன் வல்லவராகவேண்டும்?
அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும்,
அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்;
தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை.
அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது;
அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்;
அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி,
கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி,
21:13
சமாதானம்
ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும்,
உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை;
சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்?
அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது;
துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்;
அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது,
அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும்,
பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்;
அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார்.
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும்,
சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான்.
அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது,
அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான்.
அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது,
அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது.
வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல்,
மனவேதனையுடன் இறக்கிறான்.
இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்;
புழுக்கள் அவர்களை மூடும்.
இதோ, நான் உங்கள் நினைவுகளையும்,
நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே?
என்று சொல்லுகிறீர்கள்.
வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா,
அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்;
அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.
அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்?
அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்?
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்;
அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும்.
பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்;
அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல,
அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள்.
நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன?
உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான்.
எலிப்பாஸின் வார்த்தைகள்
அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி,
உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
உம்முடைய பொல்லாப்பு பெரியதும்,
உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி,
ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும்,
பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது;
கனவான் அதில் குடியேறினான்.
விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்;
தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது;
திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது,
பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ?
நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
நீர்: தேவன் எப்படி அறிவார்,
இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது;
வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்;
அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும்,
அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும்,
சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
எங்கள் நிலைமை அழியாமல்,
அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்;
அதினால் உமக்கு நன்மைவரும்.
அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு,
அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால்,
திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும்,
ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்;
அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்;
உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல,
தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்;
உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.
யோபுவின் வார்த்தைகள்
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்;
அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து,
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து,
காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து,
அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ?
அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்;
அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன்.
இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை;
பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.
இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை;
வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது;
அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன்.
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை;
அவருடைய வாயின் வார்த்தைகளை
எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்;
அவரைத் திருப்பத்தக்கவர் யார்?
அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.
எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்;
இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்;
நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்;
சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார்.
இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும்,
இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.
சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க,
அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி,
மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள்.
தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய்,
விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு,
எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.
இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்;
வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.
துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து,
அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால்,
உடையில்லாமல் இரவுதங்கி,
மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.
அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து,
தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்.
அவனை உடையில்லாமல் நடக்கவும்,
பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,
தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும்,
தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள்.
ஊரில் மனிதர் தவிக்கிறார்கள்,
குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது;
என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை.
அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்;
அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும்,
அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள்.
கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து,
ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று,
இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான்.
விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து:
என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்;
அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள்.
விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது;
அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.
நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்;
தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால்,
அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்;
அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும்.
அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்;
புழு திருப்தியாக அவனைத் தின்னும்;
அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை;
அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு,
விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.
தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்;
அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.
தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்,
அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்;
ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து,
பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு,
மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்;
கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி,
என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
பில்தாதின் வார்த்தைகள்
தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,
அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;
நரகம் மூடப்படாதிருக்கிறது.
அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;
அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,
அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;
வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.
அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,
தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;
அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,
அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்;
அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.
யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
“என் சுவாசம் என்னிலும்,
தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,
என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை;
என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,
என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும்,
என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக;
என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன்.
என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்;
அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.
என் பகைவன் ஆகாதவனைப்போலவும்,
எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.
அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும்,
தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது
27:8
அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார்
,
அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?
ஆபத்து அவன்மேல் வரும்போது,
தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ?
அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ?
அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்;
சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும்,
கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,
அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்;
அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்;
அவர்களுடைய விதவைகளும்
27:15
அவனுடைய விதவைகள்
புலம்புவதில்லை.
அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும்,
மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,
அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு,
குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும்,
காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.
அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து,
ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்;
இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்;
அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்
ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;.
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து,
அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.
வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு,
பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.
இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்;
செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக்
கடைசிவரை ஆராய்ந்து தேடி,
இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும்,
உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான்.
பூமியின்மேல் ஆகாரம் விளையும்;
அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ,
நெருப்பால் மாறினது போலிருக்கும்.
அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்;
அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது;
கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;
சிங்கம் அதைக் கடந்ததில்லை.
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி,
மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்;
அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்;
மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?
புத்தி விளைகிற இடம் எது?
அதின் விலை மனிதனுக்குத் தெரியாது;
அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை.
ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது;
சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும்,
அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது.
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும்,
இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல;
பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது.
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது;
முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.
எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்;
புத்தி தங்கும் இடம் எங்கே?
அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
நாசமும்
28:22
அப்பொல்லியோன்
, மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
தேவனோ அதின் வழியை அறிவார்,
அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும்.
அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து,
வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து,
தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு,
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்;
அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்;
பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.
பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
“கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும்
எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது;
அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்;
என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்;
கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது;
அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய்,
வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்;
முதியோர் எழுந்து நிற்பார்கள்.
பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி,
கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
பெரியோரின் சத்தம் அடங்கி,
அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது;
என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும்,
உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
நீதியை அணிந்துகொண்டேன்;
அது என் ஆடையாயிருந்தது;
என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
நான் குருடனுக்குக் கண்ணும்,
சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து,
நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து,
அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்;
என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது;
என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
என் மகிமை என்னில் செழித்தோங்கி,
என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்;
என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்;
என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து,
பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது,
அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது,
நான் தலைவனாய் அமர்ந்து,
படைக்குள் ராஜாவைப்போலவும்,
துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;
இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி,
அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய்,
செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்;
காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்;
திருடனைத் துரத்துகிறதுபோல்:
திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும்,
பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும்,
தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி,
என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள்.
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து,
என்னைச் சிறுமைப்படுத்தினதினால்,
அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து,
தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்;
அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
பெரிய வழியை உண்டாக்கி,
தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது,
அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது;
என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது.
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது;
உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு,
என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது;
அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல,
என்னைச் சுற்றிக்கொண்டது.
சேற்றிலே தள்ளப்பட்டேன்;
புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்;
கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்;
உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு,
என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,
துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும்,
ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால்,
அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல்,
எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது;
வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
என் உள்ளம் கொதித்து,
அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்;
நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும்,
நரிகளுக்குத் தோழனுமானேன்.
என் தோல் என்மேல் கறுத்துப்போனது;
என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
என் சுரமண்டலம் புலம்பலாகவும்,
என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.
என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான்
ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி?
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும்,
உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ?
மாறுபாடானவனுக்கு ஆபத்தும்,
அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும்.
அவர் என் வழிகளைப் பார்த்து,
என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ?
நான் மாயையிலே நடந்தேனோ,
என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று,
சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து,
என் உத்தமத்தை அறிவாராக.
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும்,
என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும்,
ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால்,
அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக;
என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது.
என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி,
அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,
அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக;
வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.
அது பாதாளம்வரை எரிக்கும்
நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும்.
என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது,
அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால்,
தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்;
அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன்.
தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர்
அவனையும் உண்டாக்கினார் அல்லவோ?
ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?
ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து,
விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,
தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல்,
நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்;
நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன்.
ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும்,
ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,
அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால்,
அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும்,
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு,
திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால்,
என் கை தோள்பட்டையிலிருந்து விலகி,
என் கையின் எலும்பு முறிந்துபோவதாக.
தேவன் தண்டிப்பார் என்றும்,
அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும்,
எனக்குப் பயங்கரமாயிருந்தது.
நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து,
தங்கத்தைப்பார்த்து:
நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
என் செல்வம் அதிகமென்றும்,
என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும்,
நான் அதை நோக்கி:
என் மனம் இரகசியமாக மயங்கி,
என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,
இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்;
அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து,
பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ?
அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி,
வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று
என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ?
அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை;
வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி,
என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?
மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது,
மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது,
நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ?
ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்;
இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும்,
என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
அதை நான் என் தோளின்மேல் வைத்து,
எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே.
அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து,
ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும்,
அதின் வரப்புகள்கூட அழுகிறதும்,
கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு,
பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும்,
வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
எலிகூவின் வார்த்தைகள்
“யோபே, என் நியாயங்களைக் கேளும்;
என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
இதோ, என் வாயை இப்போது திறந்தேன்;
என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்;
நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும்.
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்;
சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்;
நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும்.
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்;
நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை;
என் கை உம்மேல் பாரமாயிருக்காது.
நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும்,
நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன்,
நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை.
இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,
என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.
அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து,
என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர்.
இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்;
மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார்.
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக்
பதில்
33:13
தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை
சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?
தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை
இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.
ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி,
அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,
அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி,
அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி,
மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும்,
மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும்,
அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும்,
தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான்.
அவன் உயிர் அப்பத்தையும்,
அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும்.
அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து,
மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது.
அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது.
ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு,
அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால்,
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க:
நீர் அவனைக் காப்பாற்றும்;
மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்;
தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான்.
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,
அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி,
அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
அவன் மனிதரை நோக்கிப் பார்த்து:
நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன்,
அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.
என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க,
அவர் அதை காப்பாற்றுவார்
ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும்,
அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும்,
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்;
நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால்,
எனக்குப் பதில் கொடும்;
நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு.
ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும்,
மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.
பின்னும் எலிகூ மறுமொழியாக:
“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;
அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,
காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக;
நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
யோபு: நான் நீதிமான்;
தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்;
மீறுதல் இல்லாதிருந்தும்,
அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,
அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு,
துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்?
எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது
மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே.
ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்;
அநீதி தேவனுக்கும்,
சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது.
மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி,
அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
தேவன் அநியாயம் செய்யாமலும்,
சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?
உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்?
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால்,
அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார்.
அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும்,
மனிதன் மண்ணுக்குத் திரும்புவான்.
உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும்,
என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ?
மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
ஒரு ராஜாவைப் பார்த்து,
நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து,
நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும்,
ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி
இப்படிச் சொல்லலாமா?
இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.
இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்;
மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்;
பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;
அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை,
மரணஇருளுமில்லை.
மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு
அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார்.
ஆராய்ந்து முடியாதவிதத்தில்,
நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி,
வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார்.
அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால்,
அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.
அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி
அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும்,
எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும்,
சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர்,
எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
மாயக்காரன் ஆளுகை செய்யாமலும்,
மக்கள் சிக்கிக்கொள்ளாமலும்,
ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது,
அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்?
அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
நான் தண்டிக்கப்பட்டேன்;
நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.
நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும்,
நான் அநியாயம் செய்தேனென்றால்,
நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.
நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால்,
உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ?
நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்;
அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
யோபு அறிவில்லாமல் பேசினார்;
அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்;
ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான்.
அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால்
யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை.
தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்;
அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி,
தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.
பின்னும் எலிகூ மறுமொழியாக:
“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று
நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?
நான் பாவியாக இல்லாததினால்
எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.
நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து,
உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?
உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?
நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்?
அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும்,
உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.
அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு,
வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும்,
ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,
என்னை உண்டாக்கினவரும்,
இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்;
அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.
தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்,
சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே;
ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது;
ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது;
அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.
ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து,
அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
பின்னும் எலிகூ:
“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்;
இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.
நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து,
என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன்.
மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;
உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;
மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்;
சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்,
அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும்,
உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு,
உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
அவர், அவர்களுடைய செயல்களையும்,
அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.
அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால்,
தங்கள் நாட்களை நன்மையாகவும்,
தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.
அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி,
ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.
மாயமுள்ள இருதயத்தார்
36:13
இருதயத்தில் விசுவசிக்காதவர்கள்
கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்;
அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை.
அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்;
இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள்.
சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி,
அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார்.
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி,
இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்;
உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்;
நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால்
அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்;
அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.
உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?
உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.
பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்;
உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;
அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்?
நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.
எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;
தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;
நாம் அவரை அறிய முடியாது;
அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்;
அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.
அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்;
சமுத்திரத்தை இருளால் மூடுகிறார்.
அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும்,
ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார்.
அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி,
அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும்,
புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.
“இதினால் என் இருதயம் தத்தளித்து,
தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும்,
அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள்.
அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும்,
பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி,
தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்;
அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்;
நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
அவர் உறைந்த மழையையும், கல்மழையையும்,
தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து:
பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று,
அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார்.
அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து,
தங்கள் கெபிகளில் தங்கும்.
தெற்கேயிருந்து சூறாவளியும்,
வடகாற்றினால் குளிரும் வரும்.
தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்;
அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும்.
அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி,
மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார்.
அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும்,
அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி,
அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார்.
ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும்,
ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார்.
யோபே, இதற்குச் செவிகொடும்;
தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
தேவன் அவைகளைத் திட்டமிட்டு,
தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ?
மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும்,
பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது,
உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ?
செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ?
அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்;
இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம்.
நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ?
ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே.
இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே;
தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது;
அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்;
அவர் மகா நீதிபரர்;
அவர் ஒடுக்கமாட்டார்.
ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்;
தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.
யெகோவாவின் வார்த்தைகள்
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?
நீ அறிவாளியானால் அதைச் சொல்.
அதற்கு அளவு குறித்தவர் யார்?
அதின்மேல் நூல்போட்டவர் யார்?
இதை நீ அறிந்திருந்தால் சொல்.
அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,
தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.
கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது,
அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
நான் அதற்கு எல்லையைக் குறித்து,
அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
இதுவரை வா, மீறி வராதே;
உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக,
அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க,
உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து,
சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்;
அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.
துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்;
மேட்டிமையான கை முறிக்கப்படும்.
நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே?
இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே?
அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ?
அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ?
உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?
உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ?
கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?
ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும்,
பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி,
இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,
பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும்,
மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து,
வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும்,
இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது?
ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து,
ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே.
அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ?
அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?
நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ?
துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ?
அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?
ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று
உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?
நீ மின்னல்களை வரவழைத்து,
அவைகள் புறப்பட்டுவந்து: இதோ,
இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?
மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்?
உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்?
தூசியானது பரவலாகவும்,
மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,
வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி,
சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது,
அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு,
ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது,
அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?
“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?
மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி,
அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?
அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று,
தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து,
அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும்.
காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்?
அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும்,
உவர்நிலத்தை தங்கும் இடமாகவும் கொடுத்தேன்.
அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து,
ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை.
அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து,
எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும்.
காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ?
அது உன் பண்ணையில் இரவு தங்குமோ?
வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ?
அது உனக்கு இசைந்து போரடிக்குமோ?
அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து,
உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம்,
நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும்,
காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல
அவைகளைப் பாதுகாக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்;
அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாததினால் அது பட்ட வருத்தம் வீணாகும்.
தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல்,
ஞானத்தை விலக்கிவைத்தார்.
அது இறக்கை விரித்து எழும்பும்போது,
குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும்.
குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ?
அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ?
அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது.
அது தரையிலே உதைத்து,
தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும்.
அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து,
பயப்படுதலை புறக்கணிக்கும்.
அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து,
எக்காளத்தின் சத்தத்திற்கு பயப்படாமல் பாயும்.
எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்;
யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும்,
சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும்.
உன் புத்தியினாலே ராஜாளி பறந்து,
தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ?
உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து,
உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும்,
பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும்.
அங்கேயிருந்து இரையை நோக்கும்;
அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்;
பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.
பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக:
“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்?
தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார்.
அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:
இதோ, நான் எளியவன்;
நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்;
என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார்.
இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்;
நான் உன்னைக் கேட்பேன்;
நீ எனக்கு பதில் சொல்.
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ?
நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ?
அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ?
இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து,
மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு,
நீ உன் கோபத்தின் கடுமையை வீசி,
அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து,
அவனைப் பணியவைத்து,
துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு.
நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து,
அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு.
அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி
நான் உன்னைப் புகழுவேன்.
இப்போதும் பிகெமோத்தை
40:15
யானையை போன்ற பெரிய மிருகம்
நீ கவனித்துப்பார்;
உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்;
அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும்,
அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது;
அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும்,
அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு,
அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும்,
சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது;
யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?
மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?
“லிவியாதானை
41:1
பெரிய திமிங்கலம் அ. முதலையாக இருக்கலாம்.
தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ?
அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ?
அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ?
குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ?
அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ?
உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ?
அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ?
அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ?
ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல்,
நீ அதனுடன் விளையாடி,
அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ?
மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து,
அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும்,
அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்;
இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய்,
அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க,
எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?
வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
அதின் உறுப்புகளும், அதின் வீரியமும்,
அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்?
அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல்
நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு
இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
அது தும்மும்போது ஒளி வீசும்,
அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது.
அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு,
நெருப்புப்பொறிகள் பறக்கும்.
கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல,
அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும்,
அதின் வாயிலிருந்து தணல் புறப்படும்.
அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்;
பயங்கரம் அதற்குமுன் நடனமாடும்.
அதின் உடல் அடுக்குகள்,
அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதின் நெஞ்சு கல்லைப்போலவும்,
எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி,
வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
அது இரும்பை வைக்கோலாகவும்,
வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும்.
அம்பு அதைத் துரத்தாது;
கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி,
ஈட்டியின் அசைவை இகழும்.
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும்,
அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும்.
அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து,
கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்;
ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை;
அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது.
அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது;
அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.
யோபுவின் வார்த்தைகள்
யெகோவா இந்த வார்த்தைகளை யோபுடன் பேசினபின், யெகோவா தேமானியனான எலிப்பாசை நோக்கி: “உன்மேலும் உன் இரண்டு நண்பர்கள்மேலும் எனக்குக் கோபம் வருகிறது; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை.
ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவனுடைய முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்திற்கு ஏற்றவிதத்தில் நடத்தாதிருப்பேன்; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை” என்றார்.
அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், யெகோவா தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது யெகோவா யோபின் முகத்தைப் பார்த்தார்.
யோபு தன் நண்பனுக்காக வேண்டுதல் செய்தபோது, யெகோவா அவனுடைய சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைவிட இரண்டுமடங்காகக் யெகோவா அவனுக்குத் தந்தருளினார்.
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன்பு அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனுடன் உணவருந்தி, யெகோவா அவன்மேல் வரச்செய்த எல்லா பாதிப்பினால் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.