அத்தியாயம் 10
சாலொமோனின் நீதிமொழிகள் 
 1 சாலொமோனின் நீதிமொழிகள்: 
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 
மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 
 2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; 
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 
 3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; 
துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 
 4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 
சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 
 5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 
அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 
 6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; 
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 
 7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; 
துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 
 8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; 
அலப்புகிற மூடனோ விழுவான். 
 9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; 
கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 
 10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; 
அலப்புகிற மூடன் விழுவான். 
 11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 
 12 பகை விரோதங்களை எழுப்பும்; 
அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 
 13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 
மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 
 14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; 
மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 
 15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; 
ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 
 16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், 
துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 
 17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; 
திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 
 18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; 
புறங்கூறுகிறவன் மதிகேடன். 
 19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 
தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 
 20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; 
துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 
 21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; 
மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 
 22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; 
அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 
 23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; 
புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 
 24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; 
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 
 25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; 
நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 
 26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, 
அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 
 27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; 
துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 
 28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; 
துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 
 29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, 
அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். 
 30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; 
துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 
 31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 
மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 
 32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; 
துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.