அத்தியாயம் 11
நீதியின் பயன்கள் 
 1 கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; 
சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 
 2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்; 
தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 
 3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; 
துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 
 4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; 
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 
 5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; 
துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். 
 6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; 
துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். 
 7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; 
அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். 
 8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; 
அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 
 9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; 
நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 
 10 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; 
துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். 
 11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; 
துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். 
 12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; 
புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 
 13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; 
ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 
 14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; 
அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 
 15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; 
பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். 
 16 நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; 
பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். 
 17 தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; 
கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். 
 18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; 
நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 
 19 நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, 
தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். 
 20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; 
உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 
 21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; 
நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 
 22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், 
பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். 
 23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே; 
துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். 
 24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; 
அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் 
வறுமையடைபவர்களும் உண்டு. 
 25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; 
எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 
 26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; 
விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 
 27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; 
தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 
 28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; 
நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். 
 29 தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; 
மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். 
 30 நீதிமானுடைய பலன் ஜீவமரம்; 
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். 
 31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் 
பாவிக்கும் எத்தனை அதிகம்.