அத்தியாயம் 17
விவேகத்தினால் வரும் நன்மை 
 1 சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, 
சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். 
 2 புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, 
சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். 
 3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; 
இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. 
 4 தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; 
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். 
 5 ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; 
ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 
 6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; 
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. 
 7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; 
பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. 
 8 லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; 
அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். 
 9 குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; 
கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். 
 10 மூடனை நூறடி அடிப்பதைவிட, 
புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். 
 11 தீயவன் கலகத்தையே தேடுகிறான்; 
கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். 
 12 தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, 
குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். 
 13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, 
அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. 
 14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; 
ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. 
 15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், 
நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். 
 16 ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? 
அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. 
 17 நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; 
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 
 18 புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். 
 19 விவாதப்பிரியன் பாவப்பிரியன்; 
தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். 
 20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; 
பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். 
 21 மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; 
மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 
 22 மனமகிழ்ச்சி நல்ல மருந்து; 
முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். 
 23 துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். 
 24 ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; 
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். 
 25 மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், 
தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 
 26 நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. 
 27 அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; 
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 
 28 பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; 
தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.