அத்தியாயம் 19
ஞானம் நன்மைகளின் ஊற்று 
 1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, 
உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். 
 2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; 
கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 
 3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; 
என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். 
 4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; 
தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். 
 5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; 
பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 
 6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; 
கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். 
 7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, 
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; 
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், 
அவைகளோ வெறும் வார்த்தைகளே. 
 8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; 
புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 
 9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; 
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 
 10 மூடனுக்குச் செல்வம் தகாது; 
பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. 
 11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; 
குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. 
 12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; 
அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். 
 13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 
மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 
 14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; 
புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. 
 15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 
அசதியானவன் பட்டினியாக இருப்பான். 
 16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; 
தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். 
 17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 
 18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; 
ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. 
 19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; 
நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். 
 20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 
 21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; 
ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். 
 22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; 
பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். 
 23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; 
அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; 
தீமை அவனை அணுகாது. 
 24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, 
அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். 
 25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; 
புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 
 26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், 
வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். 
 27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் 
போதகங்களை நீ கேட்காதே. 
 28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; 
துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். 
 29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், 
மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.