சங்கீதம் 25
தாவீதின் பாடல். 
 1 யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 
 2 என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், 
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 
என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். 
 3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; 
காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 
 4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; 
உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். 
 5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; 
நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், 
உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். 
 6 யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், 
அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. 
 7 என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; 
யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். 
 8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; 
ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். 
 9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, 
சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 
 10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, 
அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. 
 11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; 
உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். 
 12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ 
அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 
 13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; 
அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். 
 14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; 
அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 
 15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; 
அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். 
 16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; 
நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். 
 17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; 
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். 
 18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, 
என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். 
 19 என்னுடைய எதிரிகளைப் பாரும்; 
அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். 
 20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; 
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். 
 21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 
நான் உமக்குக் காத்திருக்கிறேன். 
 22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.