சங்கீதம் 62
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. 
 1 தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; 
அவரால் என் இரட்சிப்பு வரும். 
 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், 
என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; 
நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 
 3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், 
நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், 
சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். 
 4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே 
அவர்கள் ஆலோசனைசெய்து, 
பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, 
தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். 
(சேலா) 
 5 என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; 
நான் நம்புகிறது அவராலே வரும். 
 6 அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், 
என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; 
நான் அசைக்கப்படுவதில்லை. 
 7 என்னுடைய இரட்சிப்பும், 
என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; 
பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 
 8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; 
அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; 
தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 
 9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; 
தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் 
மாயையிலும் லேசானவர்கள். 
 10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; 
செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். 
 11 தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; 
வல்லமை தேவனுடையது என்பதே. 
 12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! 
தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.