சங்கீதம் 63
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல். 
 1 தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; 
வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, 
என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. 
 2 இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, 
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். 
 3 உயிரைவிட உமது கிருபை நல்லது; 
என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். 
 4 என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, 
உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். 
 5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 
என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 
 6 என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, 
இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 
 7 நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், 
உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். 
 8 என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; 
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 
 9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, 
பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். 
 10 அவர்கள் வாளால் விழுவார்கள்; 
நரிகளுக்கு இரையாவார்கள். 
 11 ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; 
தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள் 
அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; 
பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.